SSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? அல்சரை அடித்துவிரட்ட கடுகு- தேங்காய் பச்சடி !

'எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும்
உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதிதான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!'வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார். "எப்பவும் 'கபகப'னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப்ப, வாந்தி வேற வந்து இம்சைப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயிடறேன்' இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல... பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.


மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.


அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, 'ஹெச் பைலோரை' (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.


இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான 'டியோடினம்'என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு 'பெப்டிக் அல்சர்' என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்துவிடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டுவிடும்.


'வந்திருப்பது அல்சர்தானா... புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது... ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?' என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.


வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன்குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு 'திம்'என்று இருக்கும். இதையே சிலர், 'சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்குமோ?' என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும்போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறுகுடலுக்கு போய்விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.


வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்... அல்சரை அறவே ஒழித்துவிடலாம்'' என்றார் டாக்டர் சந்திரமோகன்.


அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.


கடுகு-தேங்காய் பச்சடி


தேவையானவை: கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் - அரை மூடி (100 கிராம்), தயிர் - ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


வெஜிடபிள் அவியல் கூட்டு


தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது - ஒரு கப், தயிர் - அரை கப் (50 மில்லி), சர்க்கரை - ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் - கால் கப் (25 கிராம்), பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 5 மில்லி.


செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.


இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...