மாவட்ட அளவில், 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 114 புதிய வகுப்பறை
கட்டிடங்கள் கட்டப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.கரூர்
மாவட்டம் தோகமலை யூனியன் ஆர்ச்சம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியில்,
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா மற்றும் வடசேரி
பஞ்சாயத்தில் குளித்தலை எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, 5.80
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு
விழா நடந்தது.புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, கலெக்டர் ஜெயந்தி
பேசியதாவது:தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியை
ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுக்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.கரூர் மாவட்டத்தில், 2011-12ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில், 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 114 கூடுதல் வகுப்பறைகள், 1.14 கோடி ரூபாய் மதிப்பில், 127 பொது கழிப்பறைகள், 21.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்கள் கழிப்பறைகள், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடக்கிறது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம், ஆர்.டி.ஓ., சிவசௌந்திரவள்ளி, தோகமலை யூனியன் தலைவர் சந்திரசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஞானசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம், துணைப்பதிவாளர் தீபாசங்கரி உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.