தனது குழந்தையின் எல்.கே.ஜி., சீட்டுக்காக, பள்ளி
ஒன்றிற்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானத்தையே
கட்டித்தந்துள்ளார் தந்தை ஒருவர். சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம்,
குழந்தைகளின் பெற்றோரை ஒரு பங்குதாரர் போல பாவிக்கும் ஒரு சில பள்ளிகளின்
மனோநிலையை
எடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது.
சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளி அது. அந்த
பள்ளியில் தனது குழந்தைக்கு எல்.கே.ஜி., சீட் கேட்டுச் சென்றுள்ளார்
சீனிவாசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சீட்டும் கிடைத்துள்ளது. பிரதிபலான
அந்த தந்தை செய்து கொடுத்தது ரூ. 7 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் லேப்.
இதே போல், சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு தனது குழந்தையின்
அட்மிஷனுக்காக சென்ற தந்தை அப்பள்ளிக்கு இலவசமாக (?) செய்து
கொடுத்திருப்பது ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்தாட்ட மைதானம்.
பெற்றோர்களின் இந்த செயல், எந்த வழியிலாவது பள்ளியில் தங்களது
குழந்தைகளை சேர்த்து விட வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணத்தை காட்டுகிறதா
அல்லது தங்களது பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும்
கேட்டுப்பெறலாம் என்ற பள்ளிகளின் மனோபாவத்தை காட்டுகிறா என்பதை யோசித்து
பார்க்க வேண்டும். பல லட்சம் செலவு செய்தாவது, நகரில் உள்ள மிகப்பிரபலமான
பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து விட சில பெற்றோர்கள் தயாராகவே
இருக்கின்றனர். இவர்களுக்காகவே டொனேஷன், காபிடேஷன் பீஸ் என்ற பெயர்களை கூறி
வந்த பள்ளிகள் இப்போது அறிவிக்கப்பட்ட பங்களிப்பு (இன்பார்ம்டு
கான்டிரிபியூஷன்) மற்றும் திரும்பப்பெறும் முதலீடு ( ரிடர்னபிள்
இன்வெஸ்ட்மென்ட்) என மாறிக்கொண்டு விட்டனர்.
இதுகுறித்து கல்வியாளர் மாலதி கூறுகையில், தங்களது குழந்தைகளை
பள்ளியில் சேர்ப்பதற்காக மட்டுமல்லாது, குழந்தைகள் தங்களது கல்வியை
முடிக்கும் வரையில் அவர்களுக்கும் பள்ளிக்கும் இடையேயான தொடர்பு நல்லபடியாக
நீடிக்க வேண்டும் என்பதற்காக, பெற்றோர் அளிக்கும் பரிசே இது என்கிறார்.
சென்னை தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், மற்ற துறைகள்
போல் அல்லாமல், கல்வித்துறையில் பரிந்துரை என்பது அதிகமான
பணத்தைப்பெறுவதற்காகவே தெரிவிக்கப்படுகின்றதே அன்றி குறைவாகப்பெற அல்ல என
சிலாகித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டம் கொண்டு வந்துள்ள
நிலையில், பணப்பரிமாற்றத்திற்காக பள்ளிகளுடன் சேர்ந்து புதுப்புது வழிகளை
கண்டறிய பெற்றோர்கள் தற்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். சில பள்ளிகளில்
பெற்றோர்களை பள்ளிகளின் பங்குதாரர்களாகவே பாவிக்கும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில்,
எனது இரு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக இருவருக்கும் தலா ரூ. 1
லட்சம் வீதம் ரூ. 2 லட்சம் செலவு செய்தேன். அவர்களுக்காக சேமித்தேன்.
அவர்களுக்காக செலவு செய்தேன். இதனால் நான் ஒன்றும் இழக்கவில்லை என்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில்
எல்.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ரூ. 4 லட்சம் வரை டொனேஷன்
கேட்கப்படுகிறது. இதே இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருப்பூர் போன்ற
ஊர்களில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை கேட்கப்படுவதாக
கூறப்படுகிறது. சில இடங்களில் பெற்றோர்களிடம் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா
கடனாக பெற்று, அக்குழந்தை பள்ளியை விட்டுச் செல்லும் போது மீண்டும்
வழங்கும் நடைமுறையும் உள்ளதாக கூறுகின்றனர். இதற்காகவே தங்களுக்கு தேவையான
பணத்தின் அளவைப் பொறுத்து சில நிர்வாக இடங்களை ஒதுக்கி வைத்து விடுவதாகவும்
கூறப்படுகிறது. ஒருபுறம், நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாக
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வருத்தப்பட்டு
பேசிய நிலையில், மறுபுறம் நம் நாட்டில் கல்வி எங்கே செல்கிறது என்ற கேள்வி
மனிதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை.