'தொலைதொடர்புத் துறை விதித்துள்ள புதிய விதிமுறைகளை நீக்கும் வரை சிம்கார்டுகளை விற்பனை செய்வதில்லை'' என்று செல்போன் மற்றும் ரீ,சார்ஜ் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டுகிறது. இங்கு செல்போன் ரீ,சார்ஜ் செய்பவர்கள் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின்
அனுமதியின்றி எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தொலை தொடர்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.
லவ், மேட்ரிமோனி, பிரபல நடிகர்கள் போல் பேசுவது என வயதானவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருகிறார்கள்.
இதை நிறுத்துவது எப்படி என்பது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து செல்போன் மற்றும் ரீ,சார்ஜ் விற்பனையாளர்கள் சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் டில்லிபாபு, சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய அரசின் தொலை தொடர்பு துறை, செல்போனுக்கான புதிய இணைப்புகள் வழங்குவதில் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இதில் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனையாளரே பொறுப்பாவார் என குறிப்பிடப்படுவதை நீக்க வேண்டும்.
சிம் கார்டு விற்பனையில் விற்பனையாளரே முழு பொறுப்பு எனும் நிலை மாறும் வரை விற்பனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். புதிய சிம் கார்டு வாங்குபவர்களின் முகவரி மற்றும் சான்றுகளை டிராய் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்களே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். டிராய் வகுத்துள்ள விதிமுறைகளை மீறி செயல்படும் நெட்வொர்க் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுதும் உள்ள செல்போன் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிகமாக சிம் கார்டு விற்பனையை நிறுத்தியுள்ளனர். இதனால், புதிதாக செல்போன் இணைப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.