:""தமிழக
முதல்வர் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களை மாணவர்கள் நல்ல முறையில்
பயன்படுத்தி அறிவாற்றல் பெற்று திகழ வேண்டும்,'' என துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.உடுமலை கன்னிகா பரமேஸ்வரி
மேல்நிலைப்பள்ளியில், தமிழக
அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும்
நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரவீந்திரன் வரவேற்றார். பள்ளி
செயலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.விலையில்லா சைக்கிள்களை
மாணவர்களுக்கு வழங்கி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:தமிழக முதல்வர் கொண்டு வந்த உன்னதமான திட்டங்களில், விலையில்லா சைக்கிள் திட்டமும் ஒன்றாகும். மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற்று திகழும் வகையில், கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கியதுடன், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். புத்தக பை முதல் காலணி வரை அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போது, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்காக 14 வகை உணவு வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கை நெறிகள், அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். 2023ம் ஆண்டு தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டுமென்றால் மனிதவளம் மேம்பட வேண்டும். மனிதவளம் மேம்பட கல்வியே அடிப்படையாக உள்ளதால், தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசால் வழங்கப்படும் சலுகை மற்றும் திட்டங்களால் தனியார் பள்ளி நோக்கி சென்ற மாணவர்களின் பெற்றோர் கவனம் தற்போது அரசுப்பள்ளியினை திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், மாணவர்கள் சேர்க்கையும் உயர்ந்து வருகிறது.அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில், பயன்படுத்தி, அறிவாற்றல் பெற்றவர்களாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.