புதுடெல்லி: பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் அருகில் இருக்கும் செல்போன்
கோபுரங்கள் உள்பட நகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து
செல்போன் கோபுரங்களும் அகற்றப்படும் என்று மாநகராட்சி
தெரிவித்துள்ளது.இதுபற்றி கிழக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்
ராஜேஷ் கெலாட், நிருபர்களிடம் கூறியதாவது:கிழக்கு டெல்லி மாநகராட்சி
பகுதியில் எங்கு பார்த்தாலும் புற்றீசல்களை
போல செல்போன் கோபுரங்கள்
உருவாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை
எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதியில் அடங்கிய மயூர் விகார்,
பத்பர்கஞ்ச் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 250
செல்போன் கோபுரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 60
செல்போன் கோபுரங்கள் முறைகேடாக நிறுவப்பட்டு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த செல்போன் நிறுவனங்களுக்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.சில செல்போன் நிறுவனங்கள் தங்களின் செல்போன்
கோபுரங்களை பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளின் அருகே நிறுவி உள்ளன. அந்த
செல்போன் கோபுரங்களால் ஏற்படும் அதிர்வுகள் அந்த கட்டிடத்தின் மற்ற
வீடுகளில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆகையால் செல்போன் கோபுரங்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில தனியார் வீட்டு மாடிகளிலும் செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளருக்கும் செல்போன் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்த அடிப்படையில் இந்த கோபுரங்கள் நிறுவப்பட்டு இருந்தாலும் இதுவும் சட்டப்படி குற்றம்தான். பொதுவாக குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைக்க கூடாது என்று உத்தரவே இருக்கிறது. இதையறிந்த வீட்டுக்காரர் உடனடியாக தனது கட்டிடத்தில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இதுவும் சட்டப்படி குற்றம்தான். எனவே அந்த செல்போன் கோபுரமும் அகற்றப்படும்.சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள செல்போன் கோபுரங்கள் பற்றிய விவர அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அந்த அறிக்கை செவ்வாய் கிழமை மாநகராட்சி நிலைக்குழு வசம் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத செல்போன் கோபுரங்களை அகற்றும் பணி தொடங்கப்படும்.இவ்வாறு ராகேஷ் கெலாட் கூறினார்.