தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743
ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண்
153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட
வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது.
ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள்
நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால்
சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் பட்டியல் தயாராக இருந்தும் இது
வரை அது வெளியிடப்படாமலே உள்ளது.
3.6.2010-ம் தேதி வெளியிடப்பட்ட அதே அரசாணை எண்
153-ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் மாநில பதிவு மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த
வாரத்தில் அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின் மார்ச் 2012-ல் அறிவிக்கப்பட்ட
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அதில் தேர்வானவர்களுக்கு அவசர
அவசரமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஒரே வாரத்தில் தேர்வானவர்களின்
பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும்
ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 9664 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதித்
தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாக கடந்த சில
நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகி உள்ளது. அப்படியானால்
ஏற்கனவே காலியாக உள்ள 1743 பணியிடங்களும் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்றவர்களைக் கொண்டே நிரப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது. அப்படியானால்,
2011 டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வானவர்களின் கதி என்ன.
அவ்வாறே இவர்களை (2011 டிசம்பரில்
தேர்வானவர்கள்) மீண்டும் பணி நியமனம் செய்யும்பட்சத்தில் பணிமூப்பும்
பாதிக்கப்படும். எனவே அரசு தலையிட்டு, மாநில அளவில் பதிவு மூப்பில்
அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும் என கடந்த 2011 டிசம்பர் 3, 4 ஆகிய
தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்காக காத்திருப்பவர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.