பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை


நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி:"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.பிளஸ் 2வில் சாதனைஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார்.சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார்.பார்வை பெற்றது போல் மகிழ்ச்சிமுதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஞ்சனா கூறினார்.காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...