வெளிநாடுகளில் முறையாக மருத்துவ பட்டம் பெறுவோர், இந்தியாவில் மருத்துவம் செய்ய, தகுதி தேர்வு நடத்தக் கூடாது' என, அனைத்திந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் அமீர் ஜகான் கூறியதாவது:
வெளிநாடுகளில், இளநிலை மருத்துவப் பட்டம் பெறும் இந்தியர்களை, இந்தியாவில் மருத்துவம் செய்ய அனுமதிக்க, 2002ம் ஆண்டு முதல், தகுதி தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி, அதன் வரையறைக்குள் வராத, வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில், பட்டம் பெறுவோரை அடையாளம் காண, இத்தேர்வு கொண்டு வரப்பட்டது.
இதனால், எம்.சி.ஐ., அனுமதியுடன், முறையாக, வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்ற, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பட்டதாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலவும், மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தகுதி தேர்வு முறையை ரத்து செய்து, எம்.சி.ஐ., அனுமதியுடன், வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கு, நேரடியாக மருத்துவம் செய்ய, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அமீர் ஜகான் கூறினார்.