அனைவருக்கும் கல்வி திட்டத்தில் முறைகேடு :விசாரணை வேண்டும் என ஆசிரியர்கள் விருப்பம்-DINAMALAR

:தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதால் மாநில, மத்திய அரசுகள் விசாரணை நடத்தி, திட்டத்தின் நோக்கம் மாணவர்களை முழுமையாக சேர வேண்டும் என ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். மத்திய அரசின் அனைவருக்கும்
கல்வி திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருப்பதற்காக பல்வேறு நிலைகளில் இடைநிற்றலை தவிர்க்க இணைப்பு மைய பள்ளி, குழந்தை தொழிலாளர் பள்ளி, மாற்றுத்திறனாளி பள்ளி, மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி என மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவை தவிர இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளி கட்டடம், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுதல் ஆகிய பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கிராம கல்விக் குழுவினருக்கு பயிற்சி, பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கு பயிற்சி என பயிற்சிகளுக்கும் இத்திட்டத்தில் பஞ்சமில்லை.
மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது.

ஆனால் தலைமை ஆசிரியர்கள், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள திட்ட மேற்பார்வையாளர்கள் "கூட்டு' சேர்ந்து முறைகேடு செய்து வருகின்றனர். அதாவது இடைநிற்றலை தவிர்க்க நடத்தும் பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. பல மாவட்டங்களில் இல்லாத தொண்டு நிறுவனங்கள் பெயரில் இணைப்பு பள்ளிகள் நடந்து வருகின்றன. மேலும் பதிவேடுகளில் மட்டுமே இப்பள்ளிகள் நடந்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பள்ளி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. திண்டுக்கல் புறநகரில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஆதிதிராவிட மாணவர்கள் வேலை பார்ப்பதாக, வி.ஏ.ஓ.,க்களிடம் போலி சான்றிதழ் பெற்று,அந்தப் பணத்தை மேற்பார்வையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பிரித்துக் கொள்கின்றனர். பல மாற்றுத்திறனாளி, மன நலம் குன்றிய பள்ளிகள் பதிவேடு அளவிலேயே உள்ளனர். "வி.ஐ.பி.,' ஊரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர்கள் என சகல வசதிகளுடன் "வளர்ச்சி' அடைந்து வருகிறார். நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மேற்பார்வையாளரோ கட்டடங்கள் கட்டுவதில் "கல்லா' கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கிராம கல்விக்குழு,பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு பயிற்சிக்காக பள்ளிக்கு 6 நபர்கள் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு நபருக்கு நாளுக்கு 650 ரூபாய் வழங்க வேண்டும்.

இதனை குழுவினருக்கு வழங்காமல் ஒரே நாளில் பயிற்சியை முடித்து மீதியை பாக்கெட்டில் போட்டுக்கொள்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரம்,உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 78 ஆயிரத்து 283 பேருக்கு பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதிலும் மோசடி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் 77 தலைமை ஆசிரியர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நடந்து வரும் முறைகேடுகளையும் மத்திய, மாநில அரசுகள் விசாரித்தால், திட்டத்தின் நோக்கம் முழுமையடையும். இல்லையெனில் கல்வி புரோக்கர்களின் கைகளில் சிக்கிச் சீரழியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...