சங்கரன்கோவிலில் ரகசிய திருமணம் செய்த 10ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு தாலியுடன் வந்தார். பெற்றோரை அழைத்து வருமாறு ஆசிரியைகள் கூறியதால் மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப்
பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கழுத்தில் தாலியுடன் வகுப்பறைக்கு வந்தார். இதை பார்த்து ஆசிரியர்கள், சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் பள்ளி ஆசிரியைகள் விசாரித்தபோது, தனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்தார். மேலும் ஆசிரியைகளின் கேள்விகளுக்கு மாணவி முன்னுக்கு பின் முரணாகவே பதிலளிக்கவே சந்தேகமடைந்த அவர்கள் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதனால் மாணவி பள்ளியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஆசிரியைகள் பணியை கவனிக்க தொடங்கினர்.இந்நிலையில் அன்று மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டுக்கு வராததால், அவரது பெற்றோர் பள்ளிக்கு தேடி வந்தனர். அப்போது ஆசிரியைகள் தாலியுடன் அவர் பள்ளிக்கு வந்ததையும் தனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறியதையும் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மாணவி எங்கு சென்றார், அவரை யாரும் கடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.