தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 11600 பள்ளிகளிடம் அடுத்த மாதம் விசாரணை நடத்த கட்டண குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கான வினா படிவங்கள்
பள்ளி கல்வி இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த 2009ல் கட்டண குழு அமைக்கப்பட்டது. 13 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய குழு நோட்டீஸ் அனுப்பியது. தனியார் பள்ளிகள் கட்டண குழுவிடம் வரவு செலவு கணக்கை ஒப்படைத்து விசாரணையில் பங்கேற்றன. 2010 மே மாதம் அந்த பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 6400 பள்ளிகள் கட்டணத்தை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பள்ளிகளிடம் கட்டண குழு விசாரணை நடத்தியது. இதன்படி 2013ம் ஆண்டு வரைக்குமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 2013ம் ஆண்டுக்கான கால வரம்பு முடிவடையும் நிலையில் உள்ளதால், 2013ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 11600 பள்ளிகளுக்கு, 2014, 2015, 2016ம் ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
இதையடுத்து, மேற்கண்ட பள்ளிகளுக்கான வினா படிவங்களை கட்டண குழு நேற்று பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட வினா படிவங்கள் கட்டண குழுவுக்கு வந்து சேர்ந்ததும், மார்ச் முதல் வாரத்தில் விசாரணை நடத்த கட்டணக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதங்கள் சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.