ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும்' என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம்
கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று
பேசுகையில்,""மாணவ,
மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அறிவியல்
ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும். அதிகளவு விஞ்ஞானிகள்,
ஆராய்ச்சியாளர்கள் உருவாக வேண்டும். அதற்கேற்ப கல்வி முறை இருக்க வேண்டும்.
ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும். பணம்
சம்பாதிக்க மட்டும் கல்வி, என்ற நிலை மாற வேண்டும். அறிவியல் சார்ந்த பல
துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இந்த விழிப்புணர்வை மாணவ,
மாணவியர் பெற வேண்டும்,'' என்றார்.
அறிவியலே வாழ்க்கை
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்திய அணுசக்தி கழக முன்னாள்
தலைவர் சீனிவாசன் பேசுகையில், ""பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து,
போர்ச்சுகல் உட்பட வெளிநாடுகளில் வசிப்போருக்கு அறிவியல் குறித்த
விழிப்புணர்வும், தொலைநோக்கு சிந்தனையும் அதிகம். அதேபோல், நம் மாணவர்களும்
அதிகளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
குன்னூர் பாஸ்டியர் ஆய்வக அதிகாரி டாக்டர். ஷிபானி, ஊட்டி
மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மைய தலைவர் கோலா முன்னிலை
வகித்தனர்.
கண்காட்சியில் வியப்பு
ரேடியோ வானியல் மைய செயல்பாடு குறித்த வீடியோ காட்சி
காண்பிக்கப்பட்டது. குன்னூர் பாஸ்டியர் நிறுவன காட்சி அரங்கில், அந்த
நிறுவனத்தில் தயாரிக்கப்படும் வெறிநாய் கடி தடுப்பு மருந்து, முத்தடுப்பு
மருந்து தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மருந்துகள்
காலவதியாவதை, நிற மாறுதலை வைத்து கண்டறியும், கண்டுபிடிப்பு வியப்பை
ஏற்படுத்தியது. தபால் துறையின் அதிவேக சேவைகள், இன்டர்நெட் உதவியுடன்,
தபால் சேவைகளை அறிந்து கொள்ளும் தொழில் நுட்பம் குறித்து, தபால் துறை
காட்சி அரங்கில் விளக்கப்பட்டது. மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு
மையம், உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையம், ஆடு இனவிருத்தி மையங்களின்
அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
மாணவர்கள் ஆர்வம்
கூடலூர் பாத்திமா, ஜி.டி.எம்., பள்ளி, கோத்தகிரி ஐடியல்
மெட்ரிக்., குன்னூர் ஆழ்வார் பேட்டை புனித ஜோசப் பள்ளி மாணவ, மாணவியர்
காட்சி அரங்குகள் அமைத்திருந்தனர். முன்னதாக, மாவட்ட அளவில், பள்ளி மாணவ,
மாணவியர் இடையே நடத்தப்பட்ட கட்டுரை, வினாடி-வினா, விஞ்ஞானி நிகழ்வு
வரைதல், விஞ்ஞான பரிசோதனை மாதிரிகள் அமைக்கும் போட்டிகளில், முதல் மூன்று
இடங்களை பிடித்த, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. திரளான
மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்த்து வியந்தனர்.