SSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -சர்க்கரை வியாதியுடன் நலமாய் வாழ சில வழிமுறைகள்

நம் நாட்டில் நாளுக்கு நாள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது மேலும் அதிகரித்து 2020 ஆம் ஆண்டு உலகில் உள்ள
சர்க்கரை நோயாளிகளில் பாதிப்போர் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டவர்களுக்கே சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு வெள்ளை இனத்தவர்களை விட பலமடங்கு அதிகம் என்பது வெளிநாட்டில் குடியேறி பலவருடங்களாக வசித்துவரும் இந்திய இனத்தவர்களை ஆராய்ந்து பார்த்ததில் தெரிய வந்துள்ளது. இதற்கு இந்தியர்களின் பிரத்யேக மரபணுக்கள் (GENES) ஒரு காரணம் என்றாலும் சற்று சில வருடங்களுக்கு முன்பு வரை சர்க்கரை வியாதி இவ்வளவு இல்லையே என்ற கேள்வி எழலாம். இதற்கு தற்போது மாறி வரும் உணவுப் பழக்கங்களும் வாழும் முறைகளும் இன்னொரு முக்கிய காரணம்.
உடல் உழைப்பின்மை, கொழுப்பு மற்றும் சக்தி (கலோரிகள்-Calories) நிறைந்த உணவு முறைகள் மாற்றம் (ஃபாஸ்ட்புட் – - FAST FOOD கலாச்சாரம்) உணவில் அதிக எண்ணெய், நெய் உபயோகித்தல் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை, ஆகியவற்றால் உணவு முழுமையாக செரிக்கப்பட முடியாமலும் உடம்பால் உபயோகிக்க முடியாமலும் சர்க்கரை மற்றும் கொழுப்பாக (கொலெஸ்டிரால் – cholestrol) மாறி இரத்தக் குழாய்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் படிந்து உயர் இரத்த அழுத்தம் இருதய வியாதி, மூளை வியாதி – வாதம் என நோயாக வெளிப்படுகின்றது.
ஒரு சமீபத்திய ஆய்வில் நகரங்களில் வாழும் நம் நாட்டவர்களுக்கு 100-ல் 15% சதவிகிதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளதாகவும் இன்னும் 100-ல் 20% பேருக்கு சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலையான IGT (Impaired Glucose Tolerence) நிலை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வியாதி உள்ள 80% பேருக்கு சர்க்கரை உள்ளதே தெரியவில்லை. இவ்வாறு சர்க்கரை வியாதி இருப்பது தெரியாமல் பலவருடங்கள் சென்ற பிறகு சர்க்கரை வியாதியை முதல் முதலில் கண்டுபிடிக்கப்படும் போது சர்க்கரை வியாதியினால் வரும் உடல் உறுப்பு பாதிப்புகள் ஏற்கனவே வந்து விட்டன என்று வந்து நிற்கலாம். எனவேதான் தற்போது இந்தியர்களுக்கு 35 வயது முடிந்தவுடன் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது என்று எல்லா மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.இதனால் சர்க்கரை மற்றும் வேறு ஏதேனும் நோய்கள் இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பாதிப்புகள் எதுவும் வராமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.
சர்க்கரை வியாதி என்றால் என்ன? இதனால் என்னென்ன தொந்தரவுகள் வரலாம்?
நம் அனைவரும் உடலில் இரத்ததில் சர்க்கரையின் அளவு இந்த சந்தர்ப்பத்தில் இவ்வளவு இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக காலை வெறும் வயிற்றில் 80-120 மி.கி. சாப்பிட 2 மணி நேரம் கழித்து 140 வரை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைக்கும் இன்சுலின் என்ற சத்தின் அளவு தேவைக்கு தகுந்தபடி நம் கணையத்தினால் சுரக்க முடியாமல் போகும் போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக பல வருடங்கள் தொடர்ந்து இருப்பதனால் நம் உடல் முக்கிய உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இரத்தக் குழாய்கள், இதயம், கண், சிறுநீரகம், நரம்புகள் இவை முக்கியம்.
சர்க்கரை வியாதி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சர்க்கரை வியாதியின் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள பொதுவான வழிமுறைகள் பற்றி இனி காண்போம்.
எனக்கு சர்க்கரை வியாதியின் பாதிப்புகள் வருமா? வராதா? வந்தால் எத்தனைவிதமான பாதிப்புகள் வரலாம்?
சர்க்கரை வியாதி உள்ள ஒருவருக்கு சர்க்கரை பாதிப்புகள் வருமா இல்லையா? எத்தகைய பாதிப்புகள் வரும் என முன்கூட்டியே கூறுவது என்பது கடினம். ஒருவருக்கு எந்த பாதிப்பும் வராமலும் போகலாம், ஒன்றிரண்டு பாதிப்புகள் மட்டுமே வரலாம். வரும் பாதிப்பும் லேசாகவோ கடுமையானதாகவோ வரலாம். ஆனால் சர்க்கரை வியாதியின் தன்மைகளை நன்கு கட்டுப்படுத்துவதன் மூலம் இத்தகு பாதிப்புகள் வரும் வாய்ப்பு உள்ளவர்களுக்கும் அதனை பெருமளவு குறைக்கலாம் அல்லது சில சமயம் தவிர்க்கவும் முடியலாம்.
என்னுடைய சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
பெரும்பாலானவர்களுக்கு நல்ல சர்க்கரை கட்டுப்பாடு என்பது கீழ்கண்ட அளவாகும்
காலை (வெறம் வயிற்றில்) மதியம் சாப்பிடும் முன்பு சாப்பிட்ட 2 மணி நேரம் பிறகு தூங்க செல்லும் போது
80-120 மி.கி% 80-120 மி.கி% <180 மி.கி% 100-140 மி.கி%
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்குரிய சர்க்கரையின் சரியான அளவுகளை கேட்டறிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் க்ளுக்கோ மீட்டர் என்ற கருவியை வாங்கி வீட்டிலேயே நீங்களே உங்கள் சர்க்கரையின் அளவை பார்த்துக் கொள்ளலாம் இவற்றை பதிவு செய்தும் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை மருத்துவரிடம் செல்லும் போது முடிவுகளை அவரிடம் காட்டி கலந்து ஆலோசிக்கவும்.
HbAI – C என்பது என்ன? அதன் பயன் என்ன?
இரத்தத்தில் இதன் அளவு கடந்த 3 மாதங்களில் சர்க்கரையின் அளவின் சராசரியைக்காட்டுகின்றது. சர்க்கரையின் அளவு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் இந்த பரிசோதனையை 3 மாதங்ளுக்கு ஒரு முறை செய்து நம் சராசரியான சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளலாம். HbAI – ன் அளவு 7% க்கு கீழ் என்பது நல்ல சர்க்கரை கட்டுப்பாடு ஆகும். 8% க்கு மேல் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை பாதிப்புகள் வரும் வாய்ப்பும் அதிகமாகின்றது. இதன் அளவு அதிகமாக இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து உங்கள் சிகிச்சையில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரலாம்.
என்னுடைய இரத்த அழுத்தத்தைப் பற்றி நான் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு 50% பேருக்கு மேல் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது இதிலும் சிறுநீரக பாதிப்பு வந்தவர்களுக்கு இது இன்னும் அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதினால் இதயம், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம் அல்லது ஏற்கனவே பாதித்திருந்தால் பாதிப்பு அதிகமாகமலும் தடுக்கலாம். இரத்த அழுத்தம் அதை அளக்கும் கருவியால் அளக்கப்படுகின்றது.
இது இரண்டு எண்களால் குறிக்கப்படுகின்றது. உதா : – 120/80 உங்களுடைய இரத்த அழுத்தம் என்பது அதிகமாக இருந்தால் மருத்துவர் மருந்துகள் பரிந்துரைக்க கூடும். ப்ரில் அல்லது டான் என முடியும் பெயர் கொண்ட (உதா – என்லாப்ரில், லிசினோப்ரில், லொசார்டான், இர்பிசார்டான் என்பன) சில வகை இரத்த அழுத்த மருந்துகள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உகந்தவை. பெரும்பாலும் இவ்வகை மருந்துகளே முதலில் உங்களுக்கு கொடுக்கப்படும்.
சர்க்கரை + உயர் அழுத்தம் உள்ளவர்களுக்கு உரிய சரியான உகந்த இரத்த அழுத்தம் 130/85 க்கு கீழ். முடிந்த அளவு உங்கள் இரத்த அழுத்தம் இந்த எண்களுக்கு மிக அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் இரத்த அழுத்தம் அளக்கும் கருவியை வீட்டிலேயே வாங்கி வைத்து நீங்களே கூட தினமும் அளந்து பார்க்கலாம். அப்படியெனில் அவ்வளவுகளை பதிவு செய்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.
நீங்கள் புகைப் பிடிப்பவரா?
எனில் அதை உடனே நிறுத்த வேண்டும். புகைப் பிடிப்பவர்களுக்கு இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் சர்க்கரை வியாதியில் ஏற்கனவே வரக் கூடிய பாதிப்புகளான இரத்தக் குழாய் அடைப்பு, இதய வியாதி என்பன மேலும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும், இரத்த ஓட்டம் குறைவதால் புண் ஏற்பட்டால் ஆறுவதற்கு மேலும் தாமதாமாகும். மேலும் சிறுநீரக பாதிப்பு இருந்தால் அது மேலும் அதிகரிக்கக் கூடும். புகைப் பிடிப்பதை நிறுத்த உங்கள் மருத்துவரின் உதவியை நாடலாம்.
சர்க்கரை வியாதியின் பாதிப்புகள் வராமல் தடுக்க நான் என் பங்கில் வேறு என்ன செய்யலாம்?
சர்க்கரை உள்ளவர்கள் தங்கள் உடல் நலனை பாதுகாக்க மருத்துவரின் கவனிப்பு மட்டுமின்றி தங்கள் பங்கிற்கு சில கடமைகளை தவறாமல் கடை பிடிக்க வேண்டியதும் அவசியம். இவற்றை தினமும் செய்வது, சில மாதங்களுக்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை எனப் பிரிக்கலாம். உதாரணமாக தினமும் உங்கள் கால்கள், பாதங்களை நன்கு ஏதேனும் காயம், வெட்டு போன்றவை உள்ளனவா என்று நீங்களே பரிசோரித்து பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களை வருடம் ஒரு முறை பரிசோரித்து பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் உங்கள் உடல்நலனை பேணுவதில் உங்களுக்கு தனி கவனம் இருக்க வேண்டும். உங்கள் பங்குதான் மிக முக்கியம்.
நல்ல சர்க்கரை பராமரிப்புக்கான வழி முறைகள்
தினமும் செய்ய வேண்டிய செயல்கள்
1. உணவுகளை உங்கள் எடை, உடல், உழைப்பு, சர்க்கரை வியாதியின் பாதிப்புகள் உள்ளதா இல்லையா என்பவைகளைப் பொறுத்து உங்கள் மருத்துவர் / உணவு நிபணர் ஒரு அட்டவணையாக கொடுத்திருப்பார்.
அதனை தவறாமல் கடைப்பிடியுங்கள். குறிப்பாக உணவுகளை ஒவ்வொரு தினமும் குறிப்பிட்ட அதே நேரத்தில் எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்
2. தினமும் 30 நிமிடங்களாவது எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் உங்கள் உடல்நிலைக்கு தகுந்த உடற்பயிற்சி முறைகளை மருத்துவரிடம் கேட்டு ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
3. உங்கள் சர்க்கரை மருந்துகளை ஒவ்வொரு தினமும் அதே நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

4. முடிந்தால் தினமும் உங்கள் சர்க்கரை அளவை க்ளுகோமீட்டர் கருவி கொண்டு பரிசோதித்து அதன் முடிவுகளை குறித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து 2-3 தினங்கள் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
5. தினமும் உங்கள் கால்களையும் பாதங்களையும் வெட்டுக் காயம், கொப்புளம், சிவப்பு நிறம், வீக்கம், நகங்களில் மாற்றங்கள் இவை உள்ளதா என்று சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
6. தினமும் காலை, மாலை பல் துலக்கி. ஈறுகளை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்தால் கொப்பளித்து விடவும்.
உங்கள் மருத்துவரை காணச்செல்லும் போது அவரிடம் கலந்து செய்ய வேண்டிய செயல்கள்

  • 1. உங்கள் சர்க்கரை அளவை பதிவுகளிலிருந்து பார்வையிடல். அதற்கு தகுந்தாற்போல் மருந்துகளை மாற்றுதல். சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ அடிக்கடி நேர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • 2. உங்கள் எடையை பார்த்துக் கொள்ளவும். உங்களுக்குரிய சரியான எடை என்ன என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை அடைய முயற்சி செய்யவும்.
  • 3. உங்கள் இரத்த அழுத்தம் சரி பார்க்கப்படும். சர்க்கரை உள்ளவர்களின் சரியான அழுத்த அளவு 130/85. அதிகமாக இருந்தால் இனி செய்ய வேண்டியதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
  • 4. சர்க்கரை மருந்துகளால் ஏதேனும் தொந்தரவு இருப்பதாக தோன்றினால்அதை மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறவும்.
  • 5. மருத்துவரிம் உங்கள் கால்களின் நரம்புகள், இரத்தக் குழாய்கள் நல்ல நிலைமையில் உள்ளதா என்று பரிசோதித்து அறிந்து கொள்ளவும்.
  • 6. உங்களுக்கு உரிய உடற்பயிற்சி முறைகள், உணவு முறைகள், இவற்றைப் பற்றி உங்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
  • 7. உங்களுக்கு மனதளவில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ, மனத்தளர்ச்சி அல்லது மன அழுத்தம் இருந்தாலோ அவைகள் குறித்து நீங்கள் கலந்தாலோசிக்கலாம்.
நீங்கள் உங்கள் மருத்துவக் குழுவுடன் சேர்ந்து வருடம் 1 அல்லது 2 முறை செய்ய செயல்கள்
1. Hb – A1-C – இந்த பரிசோதனையை வருடம் இரண்டு முறையேனும் செய்து கொள்ளுங்கள். இந்த பரிசோதனை கடந்த 3 மாதங்களில் உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவின் சராசரியான அளவைக் காட்டும்.
2. உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் விகிதாச்சாரம். இந்த பரிசோதனையில் வெவ்வேறான கொழுப்புச்சத்து வகைகள். (மொத்த கொலஸ்டிரால், HDL- கொலஸ்டிரால். LDL கொலஸ்டிரால், ட்ரைகிசெரைட்ஸ் எனப்படும் கொழுப்பு சத்து) தனித்தனியாக அளக்கப்படும். இதனால் உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பு, இரத்தக் குழாயில் படிந்து இதய வியாதி வருத்தக் கூடிய கொழுப்பு என உண்டு. இவைகளின் அளவை தனித்தனியே அறியலாம். அதற்குண்டான ஆகார முறைகள், மருந்துகள் இவற்றின் மூலம் கெடுதல் செய்யும் கொழுப்புகளின் அளவைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உங்கள் கொழுப்புகளின் அளவு கீழ்க்கண்ட அளவு இருக்க வேண்டும்.
  • 1. மொத்த கொலெஸ்டிரால் ( Total Cholestrol) <200மி.கி.%
  • 2. LDL கொலெஸ்டிரால் (LDL Cholestrol)<100 மி.கி%
  • 3. ட்ரைக்கிளிசெரைட்ஸ் (Triglycerides) <200 மி.கி%
  • 4. HDL-கொலெஸ்டிரால் (HDL Cholestrol) ஆண்களுக்கு>35, பெண்களுக்கு > 45.மி.கி%.
3. வருடத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்யத்தை எளிய சிறுநீர்ப் பரிசோதனை, இரத்தத்தில் கழிவு உப்புகளின் அளவு (யூரியா, கிரியேட்டினின்) ஆகியவற்றை பரிசோதிப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளதாக தெரிந்தால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையும் பெற வேண்டும்.
4. வருடத்திற்கு ஒரு முறையேனும் கண்களின் பாப்பாவை விரிவுபடுத்தும் மருந்து இட்டு ஆழ்ந்த கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு கண் மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டும். கண் நரம்பு படலத்தில் (RETINA) வரும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் லேசர் மருத்துவத்தால் கண் வாய்ப்பு கெடாமல் தடுக்கலாம்.
5. உங்கள் பல்மருத்துவரை வருடம் 2 முறை பார்த்து பற்களை பரிசோதித்து பற்களை சுத்தம் செய்து கொள்ளவும். இதனால் பல் சொத்ததை, அதிலிருந்து கிருமிகள் உடல் முழுக்க பரவும் வாய்ப்பு இவற்றை தவிர்க்கலாம்.
6. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சில தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சில ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆனால் இவை இந்தியாவில் அவ்வளவு பரவலாக கிடைப்பதில்லை.
இவைகளை எல்லோராலும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாது என்று தோன்றினாலும் முயன்றால் முடியும். அடிக்கடி மருத்துவரிடம் செல்வது, வெவ்வேறு சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது, அடிக்கடி பரிசோதனைகள் ஆகியன சிலருக்கு நேரம், பணம், அதிகம் செலவழிப்பதாக தோன்றினாலும் சர்க்கரை வியாதியினால் வரும் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு, வாத நோய், சிறுநீரக செயலிழப்பு, கண் பார்வை பறிபோகுதல் போன்ற பாதிப்புகளை தவிர்க்க இது ஒன்றே வழி என்றுணரும் போது அதன் முக்கியத்துவம் புரியும். பாதிப்புகள் வந்த பிறகு அதற்கு செலவிடும் நேரம், பணம் பலமடங்கு. அதை விட பாதிப்புகள் வந்த பிறகு அதை முழுமையாக சரி செய்ய இயலாமலும் போகலாம். எனவே சர்க்கரை வியாதியின் பாதிப்புகளை வரு முன் காப்பதே சாலச் சிறந்தது. அதற்கு நோயாளியின் முழு முயற்சியும், ஒத்துழைப்பும் அவசியம். 
NEXT WEEK......சாப்பிட்ட பின் நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...