தொலைதூர கல்வி படிப்பு, தகவல் மையத்தில் சோதனை எதிரொலி: 46 பேருக்கு சம்பளம் "கட்'

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி படிப்பு மையம், தகவல் மையத்தில், அதிரடி ஆய்வின் போது, "ஆப்சென்ட்'டான, 46 பேருக்கு சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தொலைதூர கல்வி இயக்ககம் மூலம், தமிழகத்தில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
இதற்காக, நகராட்சி பகுதியில், 89 தொலைத்தூர கல்வி படிப்பு மையம், பேரூராட்சி பகுதியில், 121 தொலைத்தூர கல்வி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் பணிபுரிவோர், சரியாக அலுவலகம் வருவதில்லை எனவும், மாணவர்கள் கட்டணங்களில் முறைகேடுகள் உள்ளதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அனைத்து மாவட்டங்களில் உள்ள தொலை தூர கல்வி படிப்பு மையம், தகவல் மையங்களில், நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா உத்தரவை அடுத்து, கடந்த, 25ம் தேதி வருவாய்த் துறையினர், அதிரடியாக ஆய்வு செய்தனர். அதில், நாகர்கோவில், சேலம், நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில் படிப்பு மையம், தகவல் மையங்கள் மூடியிருப்பதும், பல மையங்களில் பணியாளர்கள் சொற்ப அளவிலேயே இருந்ததும் தெரியவந்தது. வருவாய்த்துறை ஆய்வு அறிக்கையில், மைய சிறப்பு அதிகாரிகள், தொடர்பு அதிகாரி, உதவி பேராசிரியர்கள் என, 150 பேர் பணிக்கு வராதது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஷிவ்தாஸ் மீனா விசாரணை நடத்தியதில், சோதனையின் போது இல்லாத சிலர், விடுப்பு கடிதம் கொடுத்துச் சென்றது தெரிய வந்தது. அடுத்த முறை விடுப்பு எடுத்தால், பல்கலைக் கழக தலைமை அலுவலகத்திற்கு தெரியப் படுத்த வேண்டும் என, எச்சரித்துள்ளார். நாமக்கல், பூந்தமல்லி, ஆவடி, சேலம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உட்பட, பல்வேறு இடங்களில், 46 பேர், எந்தவித அனுமதியும், விடுப்பு கடிதமும் இல்லாமல் பணிக்கு வராதது தெரிந்தது. இவர்களுக்கு, இந்த மாதத்திற்கான சம்பளத்தை நிறுத்தும்படி, சம்மந்தப்பட்ட துறைக்கு, நிர்வாக சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனால், பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...