போலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு-DINAKARAN


ஆசிரியர் தகுதித் தேர்வு போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய(டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த
17, 18ம் தேதிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு (டெட்) நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாளை தருவதாக கூறி மோசடி நடந்தது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் புகார் செய்தார். அதில், ஒரு கும்பல் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் தருவதாக கூறி தன்னிடம் ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு, தராமல் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி அருகே 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

இந்த மோசடி தொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் இருளப்பட்டி இளையராஜா (30), கிருஷ்ணகிரியை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கணபதி, அவரது மனைவி எஸ்தர், ஓசூர் அடுத்த காமன்தொட்டி கிருஷ்ணப்பா, ஓசூர் சந்திரசேகர், ஜக்கசமுத்திரம் டாஸ்மாக் விற்பனையாளர் அசோகன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் ரூ.7.80 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து போலி வினாத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீசார் அரூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த வெங்கட்செல்வன், அவரது தம்பி சீனிவாசன், ஜேம்ஸ், அரூர் பொய்யப்பட்டி  துரைபாண்டியன், பாப்பிசெட்டிப்பட்டி வெங்கட்ராமன், நாசன்கொட்டாய் ரமேஷ், பென்னாகரம் கோபி உள்ளிட்ட 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வினாத்தாள் மோசடி தொடர்பாக வெங்கட்செல்வன், சீனிவாசன், ஜேம்ஸ், வெங்கட்ராமன், ரமேஷ் ஆகிய 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி இந்த மோசடியில் பென்னாகரத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். போலீஸ் விசாரணையில் அந்த நபரிடம் ஏராளமான அரசு அதிகாரிகள் செல்போனில் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆர்ஐ சக்திவேல், பிக்கிலிகொல்லப்பட்டி விஏஒ ரவிந்திரன் உட்பட 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். 5 மணி நேரம் விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குரூப்,2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணைய (டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...