"எஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,), தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை, 2,000 கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாயாக குறைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி
நெருக்கடி காரணமாக, தமிழகம் மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், இந்த நிதி குறைப்பு நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும், கட்டாயம், எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. பின், இத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிப்பவர்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கொண்டு வரப்பட்டது. இரு திட்டங்களுக்கும், தனித்தனியே, மத்திய அரசு, நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில், 70 சதவீதம், தொடக்க கல்வித்துறை கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சம்பளமாக வழங்கப்படுகிறது. 30 சதவீத நிதி, ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதற்கு தேவைப்படும் நிதியை அளிக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு, அறிக்கை அளிக்கும். அதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து, நிதியை ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிதி ஒதுக்கீடு செய்துவந்த மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கு அதை, 1,500 கோடி ரூபாயாக குறைத்து விட்டது என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு (2012 - 13), 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு (2013 - 14), 3,000 கோடி ரூபாய்க்கு, திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால், இதில், 50 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்ட நிதியில், 50 சதவீத நிதியைத் தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக, நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி, சிறிது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, 460 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. மத்திய அரசு நிதியில், புதிய பள்ளி கட்டடங்கள், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த நிதியை குறைத்திருப்பதால், பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...